போலி

தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பேர்களைப் போல நானும் ஒரு சினிமா ரசிகன்தான். எனவே அதுசார்ந்த விஷயங்களை வாசிப்பதில், தெரிந்து கொள்வதில் கூடுதலாகவே ஆர்வம் உண்டு. அப்படி நாம் விரும்பி ரசிக்கும் சினிமாவில், வெள்ளித்திரையில் தங்களது முகத்தை சில நொடிகளேனும் பார்த்து விட வேண்டி காத்திருப்போர் பலர் உண்டு. ஆனால், டைட்டிலில் பெயர் வராமல், குறைந்தபட்சம் தங்களது பெயர் கூட வெளியே தெரியாமல் உழைக்கும் பலரும் உண்டு. அப்படி ஒருவரான ஸ்டண்ட் கலைஞர் 'தண்டர்' தவுலத் என்பவரின் கதையே அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதியுள்ள 'போலி' நாவல்.

அட்டைப்படம்

சிறுவயதில் இருந்து எனது  சினிமா ஆர்வத்தின் ஒரு பகுதி என்பது பெரிய திரையோ, தொலைக்காட்சியோ படம் துவங்குவதற்கு முன்பு போடப்படும் டைட்டில்களை ஆர்வமாக கவனிப்பதில் துவங்கும். இப்போது போல 'எண்ட் க்ரெடிட்ஸ்' எல்லாம் அப்போது கிடையாது அல்லவா?  அதன் வழி அறிமுகமான பெயர்கள் பல உண்டு. டிசைன்ஸ்: டாக்டர் உபால்டு, ஆப்டிக்கல்ஸ்: எஸ்.ஏ.அஜீம், சத்யநாராயணா, ரீ ரிக்கார்டிங்: ஜெ.ஜெ.மாணிக்கம்  (AVM - E தியேட்டர்), டைட்டில்ஸ்: கரிசல் ராஜா ... என அந்த பட்டியல் நீளும். அதில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவு சண்டைப்பயிற்சி. மாடக்குளம் தர்மலிங்கம், மாடக்குளம் ரவி, 'விக்ரம்' தர்மா, 'சூப்பர்' சுப்பராயன், 'ஜூடோ' ராமு எனச் செல்லும் அப்பட்டியலில் - சிவந்தி ஆதித்தனின் ஆசி பெற்ற 'ராம்போ' ராஜ்குமார் என்று வருவது இப்போதும் மறக்க முடியாத ஒரு பெயராகும். அதுபோல கருப்பு வெள்ளை திரைப்படங்களில் 'அரங்கப் பொருட்கள்: சினி டெக்கர்ஸ்' என்று இருந்தால், அரங்க மேலாண்மை - ஆறுமுகம் அல்லது லோகநாதன் ஆச்சாரி என்று போட்டு, அவருக்கு உதவியாக ஐந்தாறு பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதனைப்  பார்க்கும்போது இவர்கள் எல்லாம் பிறகு என்ன ஆகியிருப்பார்கள் என்று மனதிற்குள் கற்பனைக் குதிரை அதுபாட்டுக்கு ஓடும்.   

'உழைக்கும் கரங்கள்' திரைப்படத்தில் எம்ஜியாருடன் மான் கொம்பு சண்டையிடும் மாடக்குளம் தர்மலிங்கம்  

வீட்டிற்குத் தெரியாமல் திரைப்படங்களில் நாயக நாயகியருக்கு 'டூப்' ஆக பணியாற்றுகிறான் சண்டைக் கலைஞன் ஒருவன்; அந்த உண்மை எதிர்பாராதவிதமாக வீட்டிற்குத் தெரியவரும்போது அவன் எதிர்கொள்ளும் சூழல் என்ன என்பதே 'போலி' நாவலின் மையம்.  எனது குறைந்தபட்ச வாசிப்பு அறிவில் திரைப்பட சண்டைக் கலைஞர் ஒருவரை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள முதல் தமிழ் நாவல் இதுதான் என்று நினைக்கிறேன்.  ஒருநாள் இரவு சென்னை அண்ணா சாலையில் முன்னணி கதாநாயகன் விஷ்ணுகாந்திற்கு 'டூப்' ஆக புல்லட் ஓட்டும்போது,  நமது கதை நாயகன் 'தண்டர்' தவுலத் கான் தனது தந்தை முஸ்தகீம் பார்வையில் சிக்கி விடுகிறார். விளைவு என்ன ஆகுமோ என்று குழம்பி, படப்பிடிப்பு முடிந்து இரவு உடனே வீட்டிற்குத்  திரும்பாமல், நண்பனது வீட்டில் தங்கிவிட்டு காலையில் வீட்டிற்குச் செல்கிறார். இந்த இடைவெளிக்குள்  தவுலத் மற்றும் முஸ்தகீம் இருவரது பார்வையில் 16 அத்தியாயங்களில் மாறி மாறி விரியும் காட்சிகளில் தவுலத்தின் வாழ்க்கைச் சித்திரம் முழுமையாக, அழகாக நமக்குப் புலனாகிறது. நாவலின் இறுதி அத்தியாயம் அவனின் தற்போதைய சூழலை, யதார்த்தத்தின் துணையோடு காட்டுகிறது.

இந்த நாவலில் முக்கியமான ஒரு விஷயமாக நான் கருதுவது  அதனுள்ளே காலத்தை காட்சிப்படுத்தியிருக்கும் விதம். சென்னை மீர்சாகிப் பேட்டையில் பிறந்து வளரும் நம் நாயகன் சிறுவயதில் இருந்து தான் பார்த்த எம்ஜியார் மற்றும் ஆங்கிலப் படங்களின் சண்டைகாட்சிகளினால் வெகுவாக ஈர்க்கப்பட்டு வருகிறான். பத்தாம் வகுப்பு கோடை விடுமுறையில் உசேன் பாயிடம் சிலமபம் கற்கும் அவன், 1970-களின் இறுதியில் அப்போதைய பள்ளியிறுதி (11) முடித்து, ஐ.டி.ஐயில் கம்பியாள் (வயர்மேன்) படிப்பில் சேர்கிறான். அங்கிருந்து, படிப்படியாக முயற்சிகள் செய்து திரையுலகில் சண்டை பயிற்சிக் குழுவில் இணைகிறான். திரையுலகில் எம்ஜியார் மற்றும் சிவாஜி சகாப்தங்கள் அந்திமத்திற்கு நகரும் வேளையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உயரங்களை நோக்கி நகர்கிறார்கள். இந்த விஷயங்கள் அனைத்தும் நாவலில் திரையரங்கங்கள் வாயிலாக, ஏரியாக்கள், சாலையின் பெயர்கள், பேருந்து வழித்தடங்கள், மனிதர்கள் சூழல்கள் என இயல்பாக பதிவாகியிருக்கின்றன. சிறு உதாரணமாக அனகாபுத்தூர் பகுதியின் வளர்ச்சி குறித்து தவ்லத்தும், தணியும் உரையாடுவதைச் சொல்லலாம்.   

ஸ்டண்ட் மாஸ்டர் மாடக்குளம் ரவி

அதேபோல 'ஸ்டண்ட் யூனியன்' எனப்படும் தென்னிந்திய திரைப்பட & டி.வி ஸ்டண்ட் இயக்குநர்கள் , ஸ்டண்ட் நடிகர்கள் யூனியனின் உறுப்பினர்கள், அவர்களது இயல்புகள், வாழ்க்கை முறை, சந்தோஷங்கள்,  அவர்களிடையே நிலவும் குண இயல்புகள், நுண்ணிய பூசல்கள் என எல்லாவற்றையும் படைப்பின் உள்ளே ஆசிரியர் கூர்மையாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். அடுத்ததாக மொழி. தவ்லத் வாழ்வில் நகரும் இடங்களுக்கேற்ப சென்னையின் மொழி நாவலில் நம்மோடு கூடவே இழைந்து பயணிக்கிறது. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த சென்னையின் 'ஸ்பெஷல்' வசைச் சொல்லின் உச்சரிப்பு, பயன்பாடு மற்றும் அர்த்தம் வரும் பகுதிகள் இருக்கிறதே, சொல்ல வேண்டாம். படித்தே தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியன் அலுவலகம்

அதற்காக நாவல் முழுக்க இப்படித்தான் சண்டைகளோடு போகிறது என்று எண்ணிவிட வேண்டாம். தவ்லத் - ஜெய்புன்னிசாவின் காதல் எபிசோடுகளும் கதையில் உண்டு. ஒரு எலக்ட்ரிகல் வேலைக்காக தவ்லத், இந்திரா நகர் செல்லும்போது உருவாகும் காதல், அடைக்கும் தாழ் இன்றி அனகாபுத்தூர் வரை நீள்கிறது. இவர்களுக்கு சீனியர்களாக இருக்கும் தவ்லத்தின் சித்தப்பாவுக்கும், ஜெய்புன்னிசாவின் சித்திக்கும் தனி காதல் ட்ராக். இந்த ஜோடிகளின் கோவளம் பயணத்தின்போது நிகழும் 'சர்பத் விடு தூது' ஒரு சுவாரசியமான எபிசோட்.

வெளியே தனக்கு விருப்பமான சண்டைக் கலைப் பிரிவில் 'டூப்' ஆக வேலை செய்வதற்காக, உள்ளே வீட்டாரிடம் ஒரு 'போலி' வேஷம் போட்டு நாட்களை நகர்த்தும் தவ்லத்தின் அனைத்து விதமான தத்தளிப்புகள் நாவலின் பக்கங்களில் ஊடுபாவாக பதிவாகியுள்ளன. அத்தோடு ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் சினிமா தலைப்புகளாக இருப்பதும்,  உள்ளடக்கத்தோடு அதற்குள்ள ஒப்புமையும் சிறப்பு கவனத்திற்கு உரியது. இறுதியில் அப்பாவை எதிர்கொண்டு தவ்லத் எடுக்கும் முடிவும், அதைத்தொடர்ந்து இறுதி அத்தியாயத்தில் தற்போதுவரை தொடர்ந்து ஒரு போலியாகவே வாழ்ந்த அவரது வாழ்க்கையின் யதார்த்தமும் நம்மை சிந்திக்க வைப்பவை.

நாவலாசிரியர் அபுல் கலாம் ஆசாத்

நாவலின் முதல் 100 பக்கங்களை வாசித்தபின் நண்பர்களிடம் பேசும்போது, ஆசிரியர் கண்டிப்பாக முன்னாள் ஸடண்ட் மேன் ஆக இருப்பார் போல என்று கூறியிருந்தேன். அந்தளவுக்கு ப்ரண்ட் ப்ளிப், பேக் ப்ளிப், சாமர் சால்ட், ஷாவல் பன்ச்.....என்று அத்தனை சண்டைப்பயிற்சி நுணுக்கங்களும், திரைப்படங்களின் சண்டைக்காட்சிகள் குறித்த அழகான விவரணைகளும் பக்கங்களில் விரவியிருந்தன. சக்திநாதன் மாஸ்டர். கிருபா மாஸ்டர் போல எத்தனையோ நிஜமான ஸ்டண்ட்  ஆளுமைகளும் கதைப்போக்கில் நம்முன் வந்துபோகிறார்கள். அவ்வளவு ஏன், 'சார்பட்டா பரம்பரை' ஆட்கள் கூட நாவலின் உள்ளே வந்து போகிறார்கள். சார்பட்டா என்பதன் பெயர் காரணமும்  அங்கே விளக்கப்படுவது. நாவலின் இறுதியில் சமீபத்திய 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் ரொம்ப பேமஸான கபிலன் - டான்சிங் ரோஸ் போட்டி பற்றி கூட வருகிறது.   

கிருபா மாஸ்டர்   (தற்போதைய படம்) 

என்னைப் பொறுத்தவரை நாவல் என்பது ஒரு தனி உலகம். வாசிக்கத் துவங்கியவுடன் உங்களை அது சட்டென்று உள்ளிழுத்து அதனுள்ளே தொடர்ந்து வசிக்க வைத்துவிட வேண்டும். அப்படியான எத்தனையோ பர்ஸனல் பேவரைட் படைப்புகள் உண்டு. அந்தவரிசையில் இந்தப் 'போலி' ஒரு அசலான படைப்பு. நான் எழுதாத விஷயங்கள் நாவலில் இன்னும் நிறையவே உண்டு. வாசித்து மகிழுங்கள். 

ஆசிரியர் அபுல் கலாம் ஆசாத்திற்கும், 2022-ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசையில் இதனை வெளியிட்டுள்ள எழுத்து பிரசுரத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!   

Comments